Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து,  இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.

சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பெருமை மிகு இந்த தேசத்தின் 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தான் மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்த தமது பயணம் நெடியது என்று குறிப்பிட்டார். தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிகளான ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் வழியில் செவ்வனே பணியாற்றப்போவதாகவும்  கூறினார்.

தொலைதூர கிராமத்தின் மண் குடிசை வீட்டில் இருந்து வந்த தாம், ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நமது நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி ஒற்றுமையில் வேற்றுமையே நமது வலிமை என்றார். நாட்டை கட்டமைப்பதில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கிருப்பதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி ஆவார்.

டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்கும் ராம்நாத் கோவிந்த், டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.பி.யாக 12 ஆண்டுகள் பதவி வகித்து இருக்கிறார்.

வருகிற 25-ந் தேதி இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு  தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை  எம்.பி.,யாக பணியாற்றினார். 2002 -ல் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share