Categories
G-20 மாநாடு இங்கிலாந்து இந்தியா ஜெர்மனி தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார். அப்போது, தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொரிய மொழியில் மோடி வாழ்த்தியதை மூன் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடனான சந்திப்பின் போது, இரு நாட்டு பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில் நார்வேயின் ஓய்வூதிய நிதிகள் மூலம் பங்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் இத்தாலி பிரதமர் ஜென்டோலினியை சந்தித்த மோடி, நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக உணவு பதப்படுத்துதல் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தங்கள் நாட்டு தொழில் துறையில் இந்தியா செய்துள்ள முதலீடுகளுக்காக மோடிக்கு, ஜென்டோலினி நன்றி தெரிவித்தார்.

இதைப்போல அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடனும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேசினார்.

இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதமர் தேரசா மேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்திய வங்கிகளில் இருந்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வரும் விஜய் மல்லையா மற்றும் நிதி மோசடி வழக்கில் தேடப்படும் லலித்மோடி ஆகியோரை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு தெரசாவை, மோடி கேட்டுக்கொண்டார்.

Share
Categories
G-20 மாநாடு உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

“அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன”: ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி 20 நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி பேசுகையில்,

தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

‘‘பாகிஸ்தானில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்து கடுமையாக தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன. அதை ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பிரிக்க்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும்; பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும்;  உலகளாவிய முறையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது.

“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.

புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.

 

 

Share