Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.

வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.

 

ஐ.நா.-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இத்தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக ஐ.நா. உறுப்பு நாடுகளை பாராட்டினார். “இதுவரை வட கொரியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடைத் தீர்மானங்களைக் காட்டிலும் இது பெரிதாகும். எனினும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாக நினைப்பதானால், அது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதாகும்.  வடகொரியாவின்  சர்வாதிகார அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, அது மேலும் வேகமாக, அபாயகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது” என்று நிக்கி ஹேலி கூறினார்.

 

மேலும் இத்தீர்மானம் வட கொரிய தொழிலாளர்களுக்கு பிறநாடுகளில் வேலைக்கான அனுமதி வழங்குவதையும் தடை செய்கிறது. வட கொரிய நிறுவனங்களுடன் மற்றநாட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதையும், புதிய முதலீடுகளையும் தடுக்கிறது.

 

வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல. அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.

 

இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நிக்கி ஹேலியின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.நா.வின் சிறப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் கூறுகையில், “வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர  அமெரிக்காவிற்கு  கணிசமான இராணுவத் தீர்வுகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்”, என்று ஹேலி, வட கொரியாவை எச்சரித்தார்.

 எமது பலங்களில் ஒன்று, நாம் கணிசமான இராணுவ சக்திகளைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் நாம் அவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த திசையில் செல்ல வேண்டும் என்று நாங்கள் இதுவரை விரும்பவில்லை

என்று அவர் கூறினார்.

இதனிடையில், அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

Share