Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.

இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.

எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரின் உணர்வை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கற்கள் வீசி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தியதை ஏற்பதாக கூறினார். ஆனால் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்கள் ஆற்றலை செலவிடுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மீது மோடி அரசிற்கு நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை பாஜக விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா உர்ஜிட் படேல் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ப. சிதம்பரம் பண மதிப்பு நீக்கம் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் ராகுல் காந்தி

சீனத்தூதருடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி காட்டமான பதில்

இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையிலான எல்லை தொடர்பான மோதல் நிலவிவரும் சூழலில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சீன தூதர் லுயோ ஜாயோஹூ சந்தித்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, எல்லையில் ஆயிரம் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிலையில், அந்நாட்டு அதிபரோடு ஊஞ்சலில் அமர்ந்து பேசுபவன் நானல்ல என்று கூறியுள்ளார். அண்மையில் சீனாவில் அதிபர் ஜிங்பிங்குடன் மோடி ஊஞ்சலில் அமர்ந்து பேசிய படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சீனத் தூதர் தன்னை சந்தித்தது குறித்து கவலைப்படும் மத்திய அரசு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சீனாவுக்கு பயணம் சென்றதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் “பாஜகவின் பக்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் முன்னர் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும்” என்று காட்டமாக பதிவுசெய்திருந்தார்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மத்திய பிரதேசம் ராகுல் காந்தி

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர்  பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் ராகுலை போலீசார் மாண்ட்சர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க வில்லை .

இதனால் அவர் பைக்கில் எந்த வித பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் செல்ல முற்பட்டார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெற கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மாண்ட்சர் மாவட்டத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது ராகுல் கூறியதாவது: ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மாண்ட்சர் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Share