Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் உயர் கல்வி தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. (CBSE) மேல்முறையீடு செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்  விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது,  நீட் தேர்வு முடிவுகளை தற்போது ரத்து செய்ய முடியாது; நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது; சுமார் 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி, 6.11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கும் துவங்கி விட்டது; இந்நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகவும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதைத்தவிர தமிழகத்தின் 85% ஒதுக்கீடு குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் பின்னர், ஐக்கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கினை, நாளை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

 

Share
Categories
அந்தரங்கத்திற்கான உரிமை இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் : உச்ச நீதி மன்றம்

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் என்று விசாரணையின் போது உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு  விசாரி த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியுள்ளது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி சொராப்ஜி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

கோபால் சுப்ரமணியம் வாதிடும்போது, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துடன் அந்தரங்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.  சோலி சொராப்ஜி வாதிடுகையில், அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை பற்றிக் குறிப்பிடவில்லை என்பதற்காக அப்படி ஒன்றே இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

ஷியாம் திவான் வாதிடும்போது, 1975-ஆம் ஆண்டு முதல் அந்தரங்கத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. எனது உடல் நாட்டுக்கு சொந்தம் என்பது சர்வாதிகார நாட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.

இதையடுத்து நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், “அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாப்பு என்பது அடிப்படை சட்டத்தை விட மேலானதா?” என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “குடிமக்கள் மீது நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை ஓர் அரசு இயற்றுவதை தடுக்க முடியாது. அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குறிப்பிட்டு உருவகப்படுத்த முடியாத வார்த்தை. அதை விளக்க முற்பட்டால் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.

நீதிபதி சந்திரசூட் குறிப்பிடுகையில், “அந்தரங்கத்துக்கான உரிமை அல்லது ரகசியங்கள் என்ன என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அதன் பொருளாக்கம் மற்றும் வரையறைகள் என்ன? ஓர் அரசால் தனியுரிமையை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்த முடியும்? அந்தரங்கத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதில் ஓர் அரசின் கடமை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்” என்று கூறினார்.

“தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பற்றிய விவரங்களை பொதுப்படையாக வெளியிடும் செயல், அந்தரங்கத்துக்கான உரிமையில் சமரசம் செய்து கொள்வதாகாதா?” என்றும் அவர் மனுதாரர்களின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்று, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கேட்டதையடுத்து,  வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

 

 

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில்,  “பான்” என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, முடிவில்  ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அவ்வுத்தரவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா; இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து பதில் தருமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த அமர்வு, புதனன்று (இன்று) விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்விவகாரத்தில் இதன் முன்பு நடைபெற்ற கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு

தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை.

தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு  வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.  தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மிருக வதை நடந்ததாகவும், விதிமீறல் இருந்ததாகவும் கூறி, தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது  மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த ராஜேஷ் இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் தடை

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 5 ஏக்கருக்கும் அதிகமாக வைத்துள்ள  விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், 3 மாதங்களில் அரசாணை வெளியிடவும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதின்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரப்பட்டது என்பது குறித்து அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share