Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.

இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.

எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரின் உணர்வை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கற்கள் வீசி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தியதை ஏற்பதாக கூறினார். ஆனால் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்கள் ஆற்றலை செலவிடுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மீது மோடி அரசிற்கு நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை பாஜக விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Share
Categories
இலங்கை தலைப்புச் செய்திகள் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை, வடக்கு  மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இவர் மிகவும் தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன்  நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது,  அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில், மோட்டர்சைக்கிளில் வந்த  மற்றொரு மெய்ப்பாதுகாவலர்,  வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.

அப்போது, அந்த இடத்தில்  வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

அந்த நபர் துப்பாக்கியைப் பறித்தெடுத்தபோது, அந்த காவலருடன் இடம்பெற்ற இழுபறியில் காவலர் காயமடைந்தார்.

நீதிபதி மாணிக்கவாசகரின் பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்த மர்ம நபர் சுட ஆரம்பித்ததாக போலீசார் தெரிவித்தனர். நீதிபதியுடன் இருந்த மற்றொரு காவலர் மர்ம நபரை நோக்கிச் சுட்டார். இதில் நீதிபதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் அநுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடத்தில் தமிழ் நீதிபதி மீது கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share