Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு அதிகம் என்று நம்புவதால், இவ்விணைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ஓபிஎஸ் அணி நிபந்தனையின்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றவும் முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம்  ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக வந்து மலர் தூவி இணைப்பு குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால், இருவரது வீடு, ஜெயலலிதா சமாதி, அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், இரவு 9.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ. பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.

இதனைக் குறித்து, இன்று ஓ.பி.எஸ். கூறுகையில், விரைவிலேயே இணைப்பு குறித்த செய்தி வெளியாகும் என்று கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன்  கூறியதாவது:

“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”

“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”

“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”

“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”

“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”

“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம்

அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது.  8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட  திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திவ்ய பாரதி  அளித்த பேட்டியில்,  “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது. இந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை தர வேண்டும் என்று போராடி இருந்தேன் . இவ்வாறு பல போரட்டங்களில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போரட்டங்களில் தொடர்ந்து திவ்ய பாரதி ஈடுபட்டுவருபவர். மேலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய – மாநில அரசுகள்

மெரினாவில் நடைபெற்ற மாணவர்ப் புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தேடிப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகின்றன. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.  பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்டதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.

இந்த நடவடிக்கைகள் முற்றிலும் சரி என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவியிலிருக்க வேண்டுமானால், பாஜக சொல்வதைக் கேட்பதை தவிர வேறு வழியில்லாததால் இப்படி தலையாட்டிப் பொம்மையாய் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால், தமிழக அரசு, மத்திய பாஜக அரசினால் “ரிமோட் கண்ட்ரோல்” செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

குதிரை பேரம் தீவிரம்: ஒபிஎஸ் TO இபிஎஸ் அணிக்கு 3 எம்எல்ஏக்கள் தாவல் ?

 

சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே.   இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.

தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல் நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுகுட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போதுள்ள 11 எம்எல்ஏக்களில் மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலான அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ -வும் இன்னும் ஒருவருமாக, 2 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் செல்வார்கள் என்றும்  கூறப்படுகிறது.

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
இலங்கை எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share