Categories
ஆந்திர பிரதேசம் இந்தியா

இனி ஆதார் இருந்தால் தான் திருப்பதி லட்டு : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலில் லட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஏழுமலையான தரிசிக்க எப்படி வரிசையில் நிற்கின்றனரோ அதே போல லட்டு பிரசாதம் வாங்கவும் வரிசையில் காத்திருந்துதான் வாங்கவேண்டும்.

இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. குளறுபடிகள் இல்லாமல், பக்தர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக தரிசன டிக்கெட், பிரசாதங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.

இந்த நடைமுறை சில மாதங்களுக்கு பிறகே அமலுக்கு வரும் என்றாலும், மக்களிடையே ஆதார் கட்டாயம் குறித்த விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இடைக்கால தடை : சுப்ரீம் கோர்ட்

வருமானவரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆதார் அட்டையைப் பான் கார்டுடன் இணைத்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளவர்களின் விவரங்கள் கிடைக்கும். இதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்க முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்த கூடாது என கூறியுள்ளது. வருமான வரி சட்டம் 139 ஏ பிரிவை இதன் மூலம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என கூறியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்காலத் தடை விதிப்பதாக கூறியுள்ளது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள் பான் எண்

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது.

வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுக்களில் “ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் “பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, “போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளனர்.

Share