ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர்

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர்
Jul 25, 2017

ஈராக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை என்னவென்று உறுதிபடத் தெரியவில்லை என்றும் இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியப் பாராளுமன்றத்தில்  அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடையே பேசும் போது, “கடத்தப்பட்ட 39 பேரும் கடைசியாக பதூஷ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுப்படைகள் அந்த நகரை மீட்க உள்ளது. அதன் பின்னர் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்று அவர்களிடம் தெரிவித்தார்.