Categories
அறிவியல் செயற்கை கோள் தலைப்புச் செய்திகள்

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.

வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள்  அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி பொருள்களிலிருந்து உருவானவையா அல்லது செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் குறுக்கீடுகளாலா என அவர்கள் அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்.

“இந்த சிக்னல்கள், வேற்று கிரக வாசிகளிடமிருந்து வந்திருக்க கூடும் என்பதே பலரையும் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டச் செய்தது”, என்கிறார் போர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அபெல் மென்டெஸ் எனும் வானியல் நிபுணர்.

பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கான நிபுணர் குழுவினை வரவழைத்து, இது குறித்த அவர்களின்   ஊகங்களையும் கேட்டறிந்த பின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேற்றுக் கிரகவாசி ஆராய்ச்சிக் குழுவின்  (SETI) பெர்க்லி ஆராய்ச்சி மையம்  அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

“இச்சமிக்ஞைகளுக்கான சரியான விளக்கமாக இவை  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புவிசார் செயற்கைக்கோள்களில் இருந்து வெளியான தகவல் பரிமாற்றங்களே ஆகும். ராஸ் 128 நட்சத்திரமானது நமது வான்வெளி நடுக்கோட்டில் (celestial equator) காணப்படுகிறது; இங்குதான் நமது புவிநிலை செயற்கைக்கோள்களும் (geostationary satellites) காணப்படுகின்றன.”

 

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தொழில் நுட்பம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்–2 செயற்கை கோள்

இன்று காலை ராமேசுவரம் வந்த இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று,  அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் மயில்சாமி அண்ணாதுரை , “மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடமும் மாணவ-மாணவிகளிடமும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.விண்வெளி ஆராய்ச்சி பாதுகாப்பு துறை என பல்வேறு துறைகளுக்கு ஆலோசகராக இருந்தவர் அப்துல்கலாம். அவரது ஆசைப்படி கடந்த 2 மாதங்களில் 14 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 10 செயற்கை கோள்கள் விஞ்ஞானிகள் மூலமும் 4 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமும் உருவாக்கி ஏவப்பட்டுள்ளது. கலாம் ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மங்களயான்-1 ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மங்கள்யான்-2 ஏவ திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.” என்றும் கூறினார்.

Share
Categories
செயற்கை கோள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

புதன் கோளைச் சுற்றப் போகும் இரட்டை செயற்கைக் கோள்கள் சென்றடைய 7 ஆண்டுகள் ஆகும்

புதன் கோளுக்கு கொண்டு செல்லும் இரட்டை செயற்கைக்கோள் தயாராகிவிட்டது. அது ஊடகவியலாளர் பார்வைக்காக நெர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.


புதன் கோளுக்கு அனுப்புவதற்கான இரட்டை செயற்கைக்கோள்கள் தயாராக உள்ளன. பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ள இந்த செயற்கைக்கோள்களை, நெதர்லாந்தில் உள்ள நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அதன் பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து அவைகளுக்குரிய கண்காணிப்பு பணிகளை தனித்தனியாக மேற்கொள்ளும்.

அடுக்கப்பட்ட விமானங்கள் என்று கூறப்படும் இந்த இரு செயற்கைகோள்கள் இணைக்கப்பட்ட நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படும். அதற்கு முன், தனித்தனியாக பிரித்து இறுதி சோதனை நடைபெறும்.

இந்த இரட்டை செயற்கைக்கோள்களின் பயணம் அடுத்த ஆண்டு விண்வெளியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த செயற்கைக்கோள்கள் புதனை சென்றடைய ஏழு ஆண்டு காலம் ஆகுமாம்.

7 ஆண்டுகள் பயணித்து புதன் கோளுக்கு சென்றடையும் இந்த செயற்கைக்கோள்கள் தங்களது கண்காணிப்பை சிறப்பாக செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அது பூமிக்கு அனுப்பும் தகவல்களை பொறுத்து அடுத்தக்கட்ட ஆய்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
Categories
இந்தியா செயற்கை கோள் தமிழகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ தயாரித்த மாணவருக்கு முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ – ஐ தயாரித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்.

64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதுமான, இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் சாட்’ என, பெயரிடப்பட்டது. இக்கையடக்க செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஜூன் 22-ம் தேதி வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடிதந்த  மாணவர் ரிபாத் ராஜுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், தமிழக முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் 31 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியா வெற்றிகரமாக இராணுவ கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் ஒரு செயற்கைக்கோளுடன், 30 சிறிய செயற்கைக்கோள்களை அவற்றுன் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இவற்றுள் ஒன்று மட்டும் வெளிநாட்டு செயற்கைக்கோள். இது இஸ்ரோவின் மலிவு விலை விண்வெளித் திட்டத்திற்கான முக்கியமான மைல்கல்லாகும்.

இஸ்ரோ தொடர்ச்சியாக பி. எஸ். எல். வி ராக்கெட்டுகளை கொண்டு  40 வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது. ராக்கெட் தரையிலிருந்து புறப்பட்டு 27 நிமிட நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப் பாதையில் செலுத்தியது.

கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள்  தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்கள் கார்ட்டோசாட்டில் பொருத்தப்பட்டுள்ளன.  இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் 10 செயற்கைக்கோள்களும், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளின் தலா மூன்று செயற்கைக்கோள்களும், ஆஸ்திரியா, சிலி, செக் குடியரசு, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் இதில் அடங்கும்.  ஏவப்பட்ட பிற 30 செயற்கைக்கோள்களில் 15 கிலோ எடை கொண்ட நியுசாட் செயற்கைக்கோளும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள நுருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவன செயற்கைக்கோள் ஆகும்.

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவில் 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அதிகம் முன் வருகின்றனர். அந்தவகையில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 30 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

இறுதி கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (வியாழக்கிழமை) காலை 5.29 மணிக்கு தொடங்கி நாளை காலை 9.29 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றுகிறது.  மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

 

Share
Categories
அறிவியல் செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டம்: கோடீஸ்வரர் இலான் மஸ்க் வெளியிட்டார்

கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார்.

இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).

மஸ்கின் திட்டப்படி விண்கப்பலைக் காலியாக பூமியிலிருந்து முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் தொடர்ச்சியாக டேங்கர் ராக்கெட்டுகளில் எரிபொருளை அனுப்பி, வழியில் ஆங்காங்கே விண்கலத்தில் நிரப்பவெண்டும். ஒரு வெற்று விண்கப்பலுக்குக் கூட, மனிதகுலம் இதற்கு முன்னர் அனுப்பிய ராக்கெட்டுகளில் நிரப்பியதைவிட அதிக அளவில்  எரிபொருள் தேவைப்படும்.

விண்வெளிக் கப்பலும், ராக்கெட் டேங்கர்களும், மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். மேலும், செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் மீத்தேனை எரிபொருளாக நிரப்பி உபயோகித்து, மீண்டும் விண்கலத்தையும், டேங்கர் ராக்கெட்டுகளையும் பூமிக்கு அனுப்ப முடிய வேண்டும். இல்லையென்றால், செவ்வாய் கிரகம் விண்கப்பல்களின் சுடுகாடாக மாறிவிடும், என்கிறார் மஸ்க்.

 

மேலும் கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக் கப்பல், 100 பேர் 80 நாள்கள்வரை வசிக்கும் அழுத்தம் ஊட்டப்பட்ட தளத்துடன் மற்றொரு 400 டன் வரையிலான சரக்கு சேமிக்கும் இடமும் கொண்டதாக இருக்கவேண்டும், என்கிறார் மஸ்க். இச்சரக்குகளில் செவ்வாயில் கட்டுமானப் பணிக்கான சாதனங்களுடன், பிரயாணிகளின் சாமான்களும், எரிபொருள் சாலை கட்டத் தேவையான பொருட்களும் அடங்கும்.

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

“ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது.

அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

 

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது.

மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இதுகுறித்து, “மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.” என்று கூறினார்.

Share