Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் ம.தி.மு.க. மலேசியா

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.

வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.

பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Share
Categories
கட்சிகள் தமிழகம் ம.தி.மு.க. வை.கோ.

வைகோ ஜாமீனில் விடுதலை

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று வியாழக்கிழமை காலை சிறையிலிருந்து வெளிவந்தார்.

பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் வைகோ குற்றம்சாட்டினார்.

மேலும் தனது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தான் தற்போது ஜாமீன் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

முன்னதாக வைகோவின் ஜாமீன் கோரும் மனு, நேற்று புதன்கிழமை சென்னை 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், வைகோவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்தே தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Share