Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. ‘கட்சியில் தினகரனுக்கு, முக்கியத்துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்’ என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.

இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தனர். சென்னையில், நேற்று மாலை இப்தார் நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, முதல்வர் தலைமையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனை முடிவில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, 19ம் தேதி மதியம், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., அறிவித்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.இது குறித்து, நாங்கள் ஒன்று கூடி பேசினோம்; அதில், ஒருமனதாக, பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, ஏகமனதாக ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

‘சசிகலா ஆதரவோடு, இந்த முடிவு எடுக்கப்பட்டதா’ என்ற கேள்விக்கு, பதில் அளிக்க, முதல்வர் மறுத்து விட்டார். பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை, பன்னீர் அணியும் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், என்ன முடிவு எடுப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, வேறெந்த தனி நபரின் பெயரையோ குறிப்பிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், தினகரனும், பன்னீர் அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிட்டனர்.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு பெரும் அளவில், பணப் பட்டுவாடா செய்ததாக, புகார்கள் எழுந்தன; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடிதம் இந்நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கேட்டு, ஏப்., 26ல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், வைரக்கண்ணன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலாகவே இப்பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியதாகத் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக கட்சி விவகாரங்கள் : முதல்வரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல்வர் தரப்பின் பதில் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

கூவத்தூர் விடுதியில் கோடிக்கணக்கில் பேரம் பற்றிய வீடியோ: எம்.எல்.ஏ-க்கள் மறுப்பு

கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. இந்த வீடியோவில் பேசியது தான் இல்லை என சரவணன் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.

மற்றொரு வீடியோ கோவை சூலூர் தொகுதியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ. கூவத்தூரில் தங்கியிருந்த போது சிலருக்கு நகை, பணம் கொடுத்தனர் என கூறியதாக வெளியானது. இதனை கனகராஜ் எம்.எல்.ஏ. மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார்.

யூடியூபில் இது தொடர்பாக வெளியான  வீடியோவின் லின்க் :

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் கோஷ்டி 1,52,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இன்று 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இதனால் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இரு கோஷ்டிகளும் தங்களுக்கே அதிமுக நிர்வாகிகள் ஆதரவு என்பதற்கான பிரமாண பத்திரங்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு கோஷ்டிகளும் இணையும் என்றும் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இரு கோஷ்டி இணைப்புக்கான ரகசிய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் கோஷ்டியின் அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் முகாமிட்டு 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்தார்.

சசிகலாவை பொதுச்செயலராகவும் தினகரனை துணைப் பொதுச்செயலராக ஏற்பதாகவும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்கள் இவை. இதுவரை மொத்தம் 3,10,000 பிரமாண பத்திரங்களை இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் கோஷ்டியும் இதேபோல் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த அவரது சகோதரர் தீபக் அழைத்ததால் அங்கு சென்றதாகவும், தீபக் அவரை திட்டமிட்டு அழைத்து ஏமாற்றி பிரச்சனை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுகவில் பரபரப்பு : தினகரனுடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.  இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என்ற இரு பிரிவாக இருந்த அதிமுகவில், இப்போது தினகரன் அணி என்ற மூன்றாவது அணியும் உருவாகும் நிலையில் இருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் பழனிசாமியின் அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. சட்டங்களை நிறைவேற்றுவது, மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்றவற்றில் இவர்கள் 3 அணிகளாக செயல்பட்டால், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார்  கூறியதாவது :

கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க வேண்டும்.

தினகரனுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை- அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கிவைத்து ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி நடத்திய அதிமுகவை காக்க வேண்டும்.யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துவோம்

தினகரனை அதிமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர் பிரதமர் மோடி

மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் வெளியான கவிதை

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல்  ஒரு  கவிதை வெளியானது.  அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார்.

மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :

 

மோடி அரசின் மூன்றாண்டு !
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

டிஜிட்டல் இந்தியா….
மேக் இன் இந்தியா…
கிளீன் இந்தியா… என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு !

ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு !

 

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர்.

சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி  இவ்விருவரின் ஜாமீன் மனுவை விசாரித்து,  இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய  உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அவரது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Share