Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு: திமுக போராட்டம் நடத்த ஐக்கோர்ட் அனுமதி; தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

Share
Categories
இந்தியா கர்நாடகா சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது.

இதனிடையே, டிஐஜி ரூபா, வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிஐஜி ரூபாவிற்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சத்யநாராயணராவின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில், ஆதாரமின்றி, ரூபா குற்றம் சாட்டியுள்ளதாகவும், சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கூறியுள்ள ரூபா, அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரத் தீர்வே தேவை : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கே தமிழகத்திற்குத் தேவை  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை. நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வால் பாதிப்பு வராது, தரம் உயரும். நீட் தமிழகத்திற்கு தேவை”, என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசிவந்த பாஜகவினர், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை இப்போதேனும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு.

‘தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியம் அல்ல. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. அடிப்படையில், நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

“நீட் தேர்வில் குளறுபடிகளே நடைபெறவில்லை”, என்று மத்திய அரசும் அதன் விசுவாசிகளும் வாதாடி வந்தார்கள். இப்போது, நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தரப்படவில்லை என்பதை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடுகள் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டில், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னவிதமான இழப்பீட்டை தரப் போகிறார்கள்? ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று அறிவித்துவிட்டு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை வழங்காத நிலையில் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதானே நியாயம்?

ஜிப்மருக்கு ஏன் விதிவிலக்கு?

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள், டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியில் நடத்தப்படுகின்ற, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைச் சிந்தனையைத் திணிக்கிற கொடுங்கோன்மைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சட்டமன்றத்தில் மாநில உரிமை காப்புக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக அரசோ குறுகிய மனப்பான்மையோடு, அற்பமான அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசுக்கு அடி பணிந்து கிடக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி மாநில உரிமையை நிலை நாட்டத் தவறி வருகிறது. நீட் விஷயத்தில் எடப்பாடி அரசின் இந்த அற்பமான போக்கு தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பது ஆகும்.

“தமிழ்நாட்டின் கல்வித்தரம் சரியல்ல”, என்ற சாரமற்ற வாதத்தை, பாஜகவினரும் அதன் அடிவருடிகளும் கூசாமல் சொல்லி வருகின்றனர். கல்வித்தரம் பற்றி பேசுவது, மாநில உரிமை பறிப்பை மறைப்பதற்குச் செய்கிற தந்திரமே தவிர வேறல்ல. இதே பாடத்திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் நூற்றுக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். உலகம் முழுவதும் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தரமில்லாத கல்வியாக இருந்திருந்தால், இந்த வாய்ப்புகள் அவர்களுக்கு வசப்பட்டிருக்குமா? எந்தவிதமான ஆதாரமும் இன்றி, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’, என்று தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசின் சார்பில் பல்கலைக்கழகங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்ட அளவுக்கு வேறெந்த மாநிலத்திலாவது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை, எங்களை விமர்சிப்போர் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு காட்டிய முனைப்பை வேறெந்த மாநிலம் செய்திருக்கிறது என்பதை அவர்கள் பட்டியல் இட்டு சொல்லட்டும். நீட் தேர்வு என்பது, கல்வித் தரத்தை ஒருபோதும் மேம்படுத்தப் போவது இல்லை. மாறாக, மாணவர் சேர்க்கையில் குளறுபடியையும் சமூக நீதிக்கு அநீதியையும்தான் ஏற்படுத்தப்போகிறது.

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும். ஏழ்மையில் வாடும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சியைப் பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாவார்கள். மேலும், நீட் தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம். ஓராண்டில் போதிய மதிப்பெண் பெறாவிடில், அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும் எழுதலாம். இது, மறைமுகமாக – சமமற்ற தன்மையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பைப் படித்துவிட்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதுவோரும், நீட் தேர்வுக்காகவே இரண்டு, மூன்று ஆண்டுகள் படித்து தேர்வு எழுதுவோரும் – தேர்வுகளை எழுதும்போது அது சமனற்ற நிலையை ஏற்படுத்தும். வசதியானவர்களுக்கு சாதகமான சூழல், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்துபோகாமல் தடுக்கப்படவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டோர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என யாவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன். திமுகழகம் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கரம் கோர்த்து, ‘உரிமை முழக்கம் இட வாருங்கள்! வாருங்கள்!’, என அழைக்கிறேன். தமிழ்நாட்டில் நாம் கோர்க்கும் கரங்களும், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களும் ‘நீட்’ என்னும் வல்லாதிக்கத்தை முறியடிக்கும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம்

அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது.  8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட  திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திவ்ய பாரதி  அளித்த பேட்டியில்,  “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது. இந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை தர வேண்டும் என்று போராடி இருந்தேன் . இவ்வாறு பல போரட்டங்களில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போரட்டங்களில் தொடர்ந்து திவ்ய பாரதி ஈடுபட்டுவருபவர். மேலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய – மாநில அரசுகள்

மெரினாவில் நடைபெற்ற மாணவர்ப் புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தேடிப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகின்றன. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.  பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்டதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.

இந்த நடவடிக்கைகள் முற்றிலும் சரி என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவியிலிருக்க வேண்டுமானால், பாஜக சொல்வதைக் கேட்பதை தவிர வேறு வழியில்லாததால் இப்படி தலையாட்டிப் பொம்மையாய் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால், தமிழக அரசு, மத்திய பாஜக அரசினால் “ரிமோட் கண்ட்ரோல்” செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும், சுமுக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

குதிரை பேரம் தீவிரம்: ஒபிஎஸ் TO இபிஎஸ் அணிக்கு 3 எம்எல்ஏக்கள் தாவல் ?

 

சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே.   இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.

தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல் நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுகுட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போதுள்ள 11 எம்எல்ஏக்களில் மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலான அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ -வும் இன்னும் ஒருவருமாக, 2 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் செல்வார்கள் என்றும்  கூறப்படுகிறது.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர்

கமல்ஹாசனைக் கண்டித்து அ.தி.மு.க.வின் நமது எம்ஜிஆர் நாளேடு கவிதை

சமீப காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர், இன்று திடீரென பழைய ஞாபகம் திரும்பியதைப்போல, கமல்ஹாசன் மீது கண்டனச் செய்தி விளியிட்டுள்ளது.

 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

“வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு மெத்தப்
பொருத்தமாகிறார்
‘மொத்தமும் வில்லன்!’

ஏழைக்குப் பயன்படாத
இந்த குரோட்டன்ஸ் செடி
எளியோருக்குப்பயன்படும்
கீரையைப் பார்த்து
பழிக்கிறது!

‘உன்னால் முடியும் தம்பி’
என்று இவர் உதட்டளவில்
வாயசைத்துப்பாடியதை,
இளையோர் கரத்தில்
மடிக்கணினி கொடுத்து
உலகை உள்ளங்கைக்குள்
உட்கார வைத்த
ஒப்பில்லா கழகத்தை
முப்பொழுதும்
தப்பென்று பழிக்கிறார்.

மஞ்சள் துண்டு தயவு
கூடவே,
ஒன்றே முக்கால்
லட்சம் கோடி
கொள்ளையர்க்கு
ஒத்தடமும் கொடுக்கிறார்.
மஞ்சள் துண்டின் தயவில்
மக்கள் திலகத்தின்
இயக்கத்தை
வன்மத்து வார்த்தைகளால்
வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்-
புரட்சித்தலைவியின்
புகழ்மனத்து இயக்கத்தை
புண்படுத்தி
மு.க.வை மகிழ்விக்க
முன்னோட்டம்
பார்க்கிறார்.
ஓடுவேன் என்றார்
ஒரு படம் ஓடாவிட்டாலே
ஓடுவேன் நாட்டைவிட்டு
என்ற
இந்த ஒப்பாரித் திலகம்
குகையில் சிம்மம் இல்லை
என்றதும் ஒத்தைக்கு ஒத்தை
வர்றியா என்பதாக
ஊளையெல்லாம்
இடுகிறார்.
காவி மீது பாசம்
கருப்புச் சட்டை
போட்டுக்கிட்டு
சாதிக்கு ஆலவட்டம்
வீசுகிற சாடிஸ்ட் கோஷம்
தூய்மை இந்தியா
திட்டத்தை
தொடங்கிவைத்து
காவி மீதும் பாசம்.

காவேரி,
முல்லைப் பெரியாறு,
மீத்தேன், கெயில்,
நெடுவாசல், ‘நீட்…’
என்றெனும்
தமிழர்தம்
உரிமை என்றால் மட்டும்
மன்மத வம்பன்
போடுவதோ
மவுன விரத வேஷம்.
உலக்கை நாயகன்
இந்த உலக்கை நாயகனின்
விமர்சன எல்லையெல்லாம்
கழகத்தைப் பழிக்கிற
ஓரம்ச திட்டம் மட்டும்
என்றால்
அதனை உலகம் சுற்றும்
வாலிபனின் இயக்கம்
ஓட ஓட விரட்டும்”. -இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு  சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள  சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். டி.வி., சிறப்பு சமையலறை, சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருக்க அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஏழு மற்றும் எட்டாவது வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் செயல்படவில்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்மூலம், டிஐஜி ருபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது அம்பலமாகி உள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்

நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல் பெயர்  யாரைக் குறிக்கிறது   ஏன்
தம்பி அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார்
எலும்பு வல்லுனர் எச். ராஜா கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச். ராஜா பெரிய எலும்பு வல்லுனரோ?” என்று நக்கல் செய்துள்ளார்
கல்லுளிமங்கர் என்ற ஊழலார் தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் ஊழலை எல்லோருக்கும் தெரியுமாறு பல ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான பின்பும் ஆதாரம் இல்லை என கல்லுளிமங்கர்கள் போல அமைச்சர்கள் சொல்வதால் இப்பெயர் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா டி.டி.வி. தினகரன் டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பிலிருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி  பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறை துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகளை மத்திய அரசு ரகசியமாக செய்ததாகவும் தெரிகிறது.  அதன்பின், சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம் தான் காரணமாக அமைந்ததாகவும் தெரிகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி. தினகரனின் நண்பரான, பெங்களூரைச் சார்ந்த மல்லிகார்ஜுனா என்பவரை விசாரித்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து பிரகாஷை விசாரிக்கையில், தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து, மத்திய அரசின் ஏஜண்டுகள், கைதிகளைப் பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை  திட்டமிட்டு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன.  அதன் பின்னரே, அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

 

Share