Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார்  கூறியதாவது :

கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க வேண்டும்.

தினகரனுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை- அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கிவைத்து ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி நடத்திய அதிமுகவை காக்க வேண்டும்.யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துவோம்

தினகரனை அதிமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர்.

சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி  இவ்விருவரின் ஜாமீன் மனுவை விசாரித்து,  இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய  உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அவரது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

டிடிவி தினகரனுக்கு நீதிமன்றக் காவல் நீடிப்பு

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். முதலில் சுகேஷ் சந்திரசேகரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும், தினகரன் கொடுத்தாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய் முன்பணத்தில் 1.30 கோடியை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் சசிகலா ஜெயலலிதா டி.டி.வி. தினகரன் தமிழகம்

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.

இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரான மனோஜ் மற்றும் அவன் கூட்டாளிகளான சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜெ.வின் மர்மம் போலவே, கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மர்மமாகவே இருக்கிறது. அந்த பங்களாவில் இருந்த ஜெ.வின் 3 முக்கிய சூட்கேஸ்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்களா நிர்வாகம் சார்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவும், தினகரனுமே எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்து வந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Share
Categories
அ.தி.மு.க. இந்தியா டி.டி.வி. தினகரன் தமிழகம்

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல் தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பரான மல்லிகார் ஜுனாவிடமும் போலீசார் ராஜாஜி பவனில் வைத்து விசாரித்தனர்.

சென்னையில் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை டி.டி.வி.தினகரனை பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தன்னுடன் தொடர் புடைய ஹவாலா ஏஜெண்டுகளின் விவரங்களை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் டெல்லியில் நரேஷ் என்ற ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இவர் மூலமாகவே டி.டி.வி. தினகரனிடம் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு பணம் சென்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் நரேசின் டெல்லி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.50 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

இந்த பணம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்ததாக நரேஷ் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு ஸ்டேட் வங்கியில் 5 கணக்குகள் உள்ளன.

இந்த கணக்குகளில் அவர் எவ்வளவு பணம் போட்டுள்ளார். யார்- யாருக்கு எப்போது பண பரிமாற்றம் செய்தார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

தினகரனின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாளை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

தினகரனிடம் சென்னையில் வைத்து மீண்டும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவரை மறுபடியும் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரனுக்கு மேலும் சில நாட்கள் காவல் நீடிப்பு கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share