Categories
இந்தியா எடப்பாடி பழனிசாமி தமிழகம்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் ஆதரவு சேகரித்தார்

பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.  அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களீடம்  கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஒருமனதாக உறுதி அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைதான் ஆதரித்திருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, என்னிடம் ஆதரவு கேட்டது ஜெயலலிதாவின் தொண்டனுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்  என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குடியரசு தலைவர் டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.  அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. ‘கட்சியில் தினகரனுக்கு, முக்கியத்துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்’ என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.

இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தனர். சென்னையில், நேற்று மாலை இப்தார் நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, முதல்வர் தலைமையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனை முடிவில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, 19ம் தேதி மதியம், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., அறிவித்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.இது குறித்து, நாங்கள் ஒன்று கூடி பேசினோம்; அதில், ஒருமனதாக, பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, ஏகமனதாக ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

‘சசிகலா ஆதரவோடு, இந்த முடிவு எடுக்கப்பட்டதா’ என்ற கேள்விக்கு, பதில் அளிக்க, முதல்வர் மறுத்து விட்டார். பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை, பன்னீர் அணியும் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், என்ன முடிவு எடுப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு பதிய தேர்தல் கமிஷன் பரிந்துரை

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, வேறெந்த தனி நபரின் பெயரையோ குறிப்பிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், தினகரனும், பன்னீர் அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிட்டனர்.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு பெரும் அளவில், பணப் பட்டுவாடா செய்ததாக, புகார்கள் எழுந்தன; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடிதம் இந்நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கேட்டு, ஏப்., 26ல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், வைரக்கண்ணன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலாகவே இப்பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியதாகத் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக கட்சி விவகாரங்கள் : முதல்வரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல்வர் தரப்பின் பதில் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் கோஷ்டி 1,52,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இன்று 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இதனால் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இரு கோஷ்டிகளும் தங்களுக்கே அதிமுக நிர்வாகிகள் ஆதரவு என்பதற்கான பிரமாண பத்திரங்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு கோஷ்டிகளும் இணையும் என்றும் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இரு கோஷ்டி இணைப்புக்கான ரகசிய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் கோஷ்டியின் அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் முகாமிட்டு 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்தார்.

சசிகலாவை பொதுச்செயலராகவும் தினகரனை துணைப் பொதுச்செயலராக ஏற்பதாகவும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்கள் இவை. இதுவரை மொத்தம் 3,10,000 பிரமாண பத்திரங்களை இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் கோஷ்டியும் இதேபோல் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தமிழகம்

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் அதற்குண்டான உத்தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிறப்பிக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 14,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து அதனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் கூறினார்.

மேலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிவரும் கேரள அரசின் நடவடிக்கை தடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 17,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த முதல்வர், இலங்கையில் அரசு வசமிடமுள்ள 135 படகுகளையும், சிறையில் அடைபட்டுள்ள 13 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்சிகள் தமிழகம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டவெண்டும் என  முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.என தகவல் வெளியாகி உள்ளது. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து கையெழுத்திட்டு உள்ளனர்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைமையகம்

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரிக்கு என்ன வேலை ?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ததார். இதற்கு பல்வேறு அரசியல் தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.

அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.

முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது.” என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம்

தமிழக அரசு கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில், திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடைந்தது; கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது; சசிகலா சிறைவாசம்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சிறைவாசம் என அதிமுக அம்மா அணி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்து இல்லாமலே போய்விட்டது. புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு என தமிழக அரசு மீதான அதிருப்தி மக்களுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், மத்திய அரசும், பாஜவும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு வந்தார். அவருடன் மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோரும் வந்தனர்.இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலில் நடந்த வாராந்திர சேவையான அஷ்டதள பத்மாராதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்உண்டியலில் காணிக்கை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், பேடி ஆஞ்சநேயர் கோயிலிலும் தரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தனிப்பட்ட முறையில் நான் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.

Share