Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு அதிகம் என்று நம்புவதால், இவ்விணைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ஓபிஎஸ் அணி நிபந்தனையின்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றவும் முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம்  ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக வந்து மலர் தூவி இணைப்பு குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால், இருவரது வீடு, ஜெயலலிதா சமாதி, அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், இரவு 9.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ. பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.

இதனைக் குறித்து, இன்று ஓ.பி.எஸ். கூறுகையில், விரைவிலேயே இணைப்பு குறித்த செய்தி வெளியாகும் என்று கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன்  கூறியதாவது:

“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”

“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”

“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”

“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”

“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”

“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும்  கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன்  5-ந்தேதி அன்று   வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தினகரன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில் , “கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்” என்று  கூறியிருக்கிறார்.  திவாகரனும் தினகரனும் இனி இணைந்து செயல்படப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து, சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் எடப்பாடியின் அலுவலகம்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு: திமுக போராட்டம் நடத்த ஐக்கோர்ட் அனுமதி; தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரத் தீர்வே தேவை : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கே தமிழகத்திற்குத் தேவை  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை. நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வால் பாதிப்பு வராது, தரம் உயரும். நீட் தமிழகத்திற்கு தேவை”, என்றெல்லாம் மனம்போன போக்கில் பேசிவந்த பாஜகவினர், தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை இப்போதேனும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு.

‘தவணை கேட்பதற்கும்’, ‘தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும்’, இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியம் அல்ல. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. அடிப்படையில், நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

“நீட் தேர்வில் குளறுபடிகளே நடைபெறவில்லை”, என்று மத்திய அரசும் அதன் விசுவாசிகளும் வாதாடி வந்தார்கள். இப்போது, நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தரப்படவில்லை என்பதை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடுகள் இருக்காது என்று உறுதி அளித்துள்ளார். கடந்த ஆண்டில், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் தந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னவிதமான இழப்பீட்டை தரப் போகிறார்கள்? ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று அறிவித்துவிட்டு, ஒரே மாதிரியான கேள்வித்தாளை வழங்காத நிலையில் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதுதானே நியாயம்?

ஜிப்மருக்கு ஏன் விதிவிலக்கு?

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு’, என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள், டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் நிதியில் நடத்தப்படுகின்ற, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், பிஜிஐ (சண்டிகர்) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விதிவிலக்குத் தந்துள்ளது ஏன்? அந்த மருத்துவக் கல்லூரிகளை விட, சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை மற்றும் சென்னை மருத்துக் கல்லூரி எந்த வகையில் தரம் குறைந்தது?

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைச் சிந்தனையைத் திணிக்கிற கொடுங்கோன்மைக்கு எதிராகத் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இயக்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சட்டமன்றத்தில் மாநில உரிமை காப்புக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக அரசோ குறுகிய மனப்பான்மையோடு, அற்பமான அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசுக்கு அடி பணிந்து கிடக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி மாநில உரிமையை நிலை நாட்டத் தவறி வருகிறது. நீட் விஷயத்தில் எடப்பாடி அரசின் இந்த அற்பமான போக்கு தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பது ஆகும்.

“தமிழ்நாட்டின் கல்வித்தரம் சரியல்ல”, என்ற சாரமற்ற வாதத்தை, பாஜகவினரும் அதன் அடிவருடிகளும் கூசாமல் சொல்லி வருகின்றனர். கல்வித்தரம் பற்றி பேசுவது, மாநில உரிமை பறிப்பை மறைப்பதற்குச் செய்கிற தந்திரமே தவிர வேறல்ல. இதே பாடத்திட்டத்தில் பயில்கிற மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் நூற்றுக்கணக்கில் வெற்றி பெறுகிறார்கள். உலகம் முழுவதும் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தரமில்லாத கல்வியாக இருந்திருந்தால், இந்த வாய்ப்புகள் அவர்களுக்கு வசப்பட்டிருக்குமா? எந்தவிதமான ஆதாரமும் இன்றி, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’, என்று தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசின் சார்பில் பல்கலைக்கழகங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்பட்ட அளவுக்கு வேறெந்த மாநிலத்திலாவது ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை, எங்களை விமர்சிப்போர் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு காட்டிய முனைப்பை வேறெந்த மாநிலம் செய்திருக்கிறது என்பதை அவர்கள் பட்டியல் இட்டு சொல்லட்டும். நீட் தேர்வு என்பது, கல்வித் தரத்தை ஒருபோதும் மேம்படுத்தப் போவது இல்லை. மாறாக, மாணவர் சேர்க்கையில் குளறுபடியையும் சமூக நீதிக்கு அநீதியையும்தான் ஏற்படுத்தப்போகிறது.

புற்றீசல் போல நீட் பயற்சி மையங்கள் இப்போதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி படைத்தவர்கள்தான் அதில் பயில முடியும். ஏழ்மையில் வாடும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சியைப் பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாவார்கள். மேலும், நீட் தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம். ஓராண்டில் போதிய மதிப்பெண் பெறாவிடில், அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும் எழுதலாம். இது, மறைமுகமாக – சமமற்ற தன்மையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பைப் படித்துவிட்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதுவோரும், நீட் தேர்வுக்காகவே இரண்டு, மூன்று ஆண்டுகள் படித்து தேர்வு எழுதுவோரும் – தேர்வுகளை எழுதும்போது அது சமனற்ற நிலையை ஏற்படுத்தும். வசதியானவர்களுக்கு சாதகமான சூழல், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக அமைந்துவிடும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்துபோகாமல் தடுக்கப்படவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டோர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என யாவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன். திமுகழகம் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கின்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கரம் கோர்த்து, ‘உரிமை முழக்கம் இட வாருங்கள்! வாருங்கள்!’, என அழைக்கிறேன். தமிழ்நாட்டில் நாம் கோர்க்கும் கரங்களும், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களும் ‘நீட்’ என்னும் வல்லாதிக்கத்தை முறியடிக்கும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம்

அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது.  8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட  திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திவ்ய பாரதி  அளித்த பேட்டியில்,  “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது. இந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை தர வேண்டும் என்று போராடி இருந்தேன் . இவ்வாறு பல போரட்டங்களில் பங்கேற்று உள்ளேன்” என்றார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போரட்டங்களில் தொடர்ந்து திவ்ய பாரதி ஈடுபட்டுவருபவர். மேலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய – மாநில அரசுகள்

மெரினாவில் நடைபெற்ற மாணவர்ப் புரட்சிக்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களைக் கண்டு குலைநடுங்கிப் போயுள்ளன அரசுகள். இதனால்தான் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தேடிப் பிடித்து குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுகின்றன. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதேபோல் நெடுவாசல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.  பெரியார் பல்கலைக் கழகத்தில் இருந்தே மாணவி வளர்மதி நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவு போட்டதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் குபேரனை கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ்.

இந்த நடவடிக்கைகள் முற்றிலும் சரி என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதவியிலிருக்க வேண்டுமானால், பாஜக சொல்வதைக் கேட்பதை தவிர வேறு வழியில்லாததால் இப்படி தலையாட்டிப் பொம்மையாய் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால், தமிழக அரசு, மத்திய பாஜக அரசினால் “ரிமோட் கண்ட்ரோல்” செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும், சுமுக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

குதிரை பேரம் தீவிரம்: ஒபிஎஸ் TO இபிஎஸ் அணிக்கு 3 எம்எல்ஏக்கள் தாவல் ?

 

சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே.   இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.

தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல் நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுகுட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போதுள்ள 11 எம்எல்ஏக்களில் மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலான அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ -வும் இன்னும் ஒருவருமாக, 2 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் செல்வார்கள் என்றும்  கூறப்படுகிறது.

Share
Categories
இலங்கை எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share