Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு அதிகம் என்று நம்புவதால், இவ்விணைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ஓபிஎஸ் அணி நிபந்தனையின்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றவும் முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம்  ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக வந்து மலர் தூவி இணைப்பு குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால், இருவரது வீடு, ஜெயலலிதா சமாதி, அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், இரவு 9.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ. பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.

இதனைக் குறித்து, இன்று ஓ.பி.எஸ். கூறுகையில், விரைவிலேயே இணைப்பு குறித்த செய்தி வெளியாகும் என்று கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன்  கூறியதாவது:

“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”

“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”

“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”

“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”

“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”

“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர்.  அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சிவகாசியில் நடைபெறும் எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.
ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு அவரது ஆதரவாளர்களும் சென்றனர். விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு அளித்து சென்றனர்.
அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த நபரின் வேட்டி அவிழ்ந்தது. அப்போது அந்த நபரின் இடுப்பில் இருந்து கத்தி ஒன்று கீழே விழுந்தது. அவர் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த நபரை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி டி.வி. எஸ். டோல்கேட் வில்வ நகரை சேர்ந்த சோழராஜன்  என்பது தெரிய வந்தது.

சந்தேகத்திற்குரிய நபர் தெரிவித்ததாவது :
 நான் ஓ.பி.எஸ்.ஆதரவாளராக இருந்து வருகிறேன். இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றேன். அப்போது அங்குள்ள ஆவின் பாலகம் அருகே கீ.செயினுடன் இணைந்த சிறிய கத்தி ஒன்று கிடந்தது. அதை எடுத்து எனது இடுப்பில் சொருகி கொண்டேன். பின்னர் ஓ.பி.எஸ். வரவேற்பதற்காக சென்றேன்.
அப்போது இடுப்பில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது இதைப் பார்த்தவர்கள் நான் ஓ.பி.எஸ்.சை தாக்கத்தான் வருகிறேன் என்று தவறாக புரிந்து கொண்டு என்னை அடித்து உதைத்து விட்டனர்.
நான் அவரின் தீவிர ஆதரவாளன். அவரை வரவேற்கத்தான் சென்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

என்னை தாக்க வந்ததாக கூறப்படும் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது. தமிழக மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி அலுவலகத்திற்கு வராமல்,  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் , 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இவர்களில் இருபது பேர் எம்எல்ஏக்கள். 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே உள்ள 53 நிர்வாகிகளுடன் மேலும் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அளித்த பேட்டியில் பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலேயே இன்னும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளரும் கேள்விக்குரியவர். இந்த நிலையில் அவரால் கட்சிக்கு எப்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தினகரன் வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். எங்களை கேட்காமல் கட்சி பதவிகளை வழங்குவதா, நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று இந்த மூன்று எம்எல்ஏக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எதுவும் தீர்மானிக்கப் படவில்லை  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில பதில்களை அளிக்கக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து, இதுவரை முடிவெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கும் இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலா எப்போது பதவியேற்றார் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி  தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று  பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது.

இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, 5 கோடி ரூபாய் பணமும், பல்வேறு ஆவணங்களும்  கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோதனையின் போது தோ்தல் தொடா்பாக யாா் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடா்பான முக்கிய ஆவணங்கள் சிக்கிதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், இதன் தொடர் நடவடிக்கையாக வருமான வரித்துறையிடம் இருந்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் வந்துள்ளது. அதில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் கல் குவாரியை முடக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும்  கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன்  5-ந்தேதி அன்று   வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தினகரன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில் , “கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்” என்று  கூறியிருக்கிறார்.  திவாகரனும் தினகரனும் இனி இணைந்து செயல்படப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து, சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் எடப்பாடியின் அலுவலகம்.

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார்.

அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

Share