Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும்

சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம். மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன. எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே கடற்கரையில் உள்ள தேசத் தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே, சிவாஜிக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 

இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதிலும், சுமுக உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரைத்துறையினர் கூறியுள்ளனர்.

 

Share
Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
இந்திய சினிமா சினிமா சினிமா இசை தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் லண்டன் இசைக் கச்சேரியால் ஹிந்தி ரசிகர்கள் விரக்தி

ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில்,  “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.

 

இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ம் தேதி லண்டனில் நடைப்பெற்றது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரகுமான் இந்தி பாடல்களை பாடுவது வழக்கமானது. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் தமிழ் பாடல்களை மட்டும் பாடி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியை புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

 

இந்தி பாடல்களை அவர் பாடாததை குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை டுவிட்டரில் வார்த்தைகளில் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடியை கொடுத்ததால் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அர்சனா சவந்த் என்ற ரசிகை வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், உங்களுடைய இன்றைய இசை நிகழ்ச்சியினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்காக மிகவும் நீண்ட காலம் நான் காத்து இருந்தேன். இதனை எதிர்பார்க்கவில்லை, என குறிப்பிட்டு உள்ளார். இந்தியில் பாடாததால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், இதனால் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சிலர் இசை நிகழ்ச்சிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி தாருங்கள், எங்களை மகிழ்விக்கவில்லை, இந்தியில் பாடவில்லை என்று எல்லாம் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு பதிலடியாக தமிழ் ரசிகர்கள் டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் உங்களால் ஒரு மணிநேரம் மற்றொரு மொழி பாடலை கேட்கமுடியவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கொள்ளும் தென் இந்தியர்களின் நிலையின் உண்மை குறித்து நினைத்து பாருங்கள் என ஹர்சா என்ற டுவிட்டர்வாசி பதிலடியை கொடுத்து உள்ளார். இந்தி பாடல்களை எங்கே? என கேள்வி எழுப்பியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியானது பிரத்யேகமாக தமிழ் பாடல்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். நிகழ்ச்சியின் பெயரே “நேற்று, இன்று, நாளை” தான் என தமிழர்கள் பதிலிட்டு உள்ளனர்.

 

இந்தி திணிப்பு என்றால் என்ன என்பதை தனது பாடல்கள் மூலம் புரியசெய்த ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுக்கள் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி பாடல்கள் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராம் பேச்சுக்கு தாயார் மன்னிப்பு கேட்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம்,   நடிகை ஓவியாவை திட்டும் போது ‘சேரி பிகேவியர்’ என்று கூறியதால், சேரிமக்களை இழிவுபடுத்தியுள்ளார் என கூறப்பட்டது.   சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால், எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என காயத்ரியின் தாய் கிரிஜா கூறியுள்ளார். சேரி தொடர்பாக காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். காயத்ரி ரகுராமை கேவலபடுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா வடிவேலு விஜய்

மெர்சல் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம் என்று வதந்தி

அட்லீ இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் வைகைப் புயல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்போது மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்த போது வடிவேலு படுகாயம் அடைந்ததாக தகவல் பரவியது. உண்மையில், வடிவேலு நன்றாக இருப்பதாகவும், இது வெறும் வதந்தி என்றும் அவருக்கு நெருக்கான வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கில படத்துக்கான ஒலிப்பதிவு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர். இந்நிலையில், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்தின் ஒலிப்பதிவுக்காக அவர் உலக ஒலிப்பதிவு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
இந்த படம் இந்திய வம்சாவளி இங்கிலாந்து இயக்குனர் குரிந்தர் சத்தா இயக்கி உள்ளார். ஹுமா குரேஷி, ஹுக் போனிவில்லே, கில்லியன் ஆண்டர்சன், மறைந்த நடிகர் ஓம்புரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்தில் வெளியான இப்படம், ‘பார்ட்டிசன்-1947’ என்ற பெயரில் ஆகஸ்டு 18-ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களில், வைஸ்ராய் இல்லத்தில் (தற்போதைய ஜனாதிபதி மாளிகை) நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
Share
Categories
சினிமா தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

தமிழக திரையரங்குகள் இன்று திறப்பு; போராட்டம் வாபஸ்

கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, திரையரங்குகளை இன்று முதல் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.

கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேச 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதையடுத்து,   4 நாட்களாக நீடித்த திரையரங்கு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரையுலகினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேசி முடிவு எடுக்க 12 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்தது.

இதில் அரசு தரப்பில் 6 பேரும் திரையுலகம் தரப்பில் 6 பேரும் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்களாக நீடித்த தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.இது குறித்து அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சினிமா தியேட்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பொறுமையுடன் இருந்த பொதுமக்களுக்கு நன்றி. 4வது நாளாக தினமும் 20 கோடி ரூபாய் அளவில் பேரிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் எங்களுடைய சிரமங்களைப் புரிந்துகொண்டனர். வரி வேண்டுமா? வேண்டாமா என்று முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் இயங்கும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி, இன்று முதல் 100 மற்றும் அதற்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு கூடுதலான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரியும் வசூலிக்கப்படும், அதன்படி 50 ரூபாய் டிக்கெட் 59 ரூபாயாகவும், 90 ரூபாய் டிக்கெட் 106 ரூபாயாகவும், 100 ரூபாய் டிக்கெட் 118 ரூபாயாகவும், 120 ரூபாய் டிக்கெட் 153 ரூபாயாகவும் இருக்கும். புதுச்சேரியில் நேற்று மாலை முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா ரஜினிகாந்த்

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார்.

டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.

திரைப்படத்துறைக்காக அரசுக்கு கோரிக்கை விடுத்த ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “திரைப்படத்துறைக்காக அக்கறையோடு குரல் கொடுத்த ரஜினிகாந்துக்கு நன்றி. முதலில் அரசுக்கு கோரிக்கை வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கமல்ஹாசன் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், இப்போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

Share