Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா ஸ்ருதி ஹாசன்

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகிவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.

Share
Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா

‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிடப்பட்டும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சங்கமித்ரா’ குறித்து முதன் முறையாக இயக்குநர் சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “‘சங்கமித்ரா’ பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நான் எப்போதும் எடுக்க நினைத்த வகை படம் இது. கடந்த 10 வருடங்களாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போது நேரம் கனிந்துவிட்டது. ஆரம்பிப்பதற்கு முன் அந்த கதைக்குத் தேவையானதை தர முடியுமா என்பதை உறுதி செய்ய விரும்பினேன்.

‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது. ‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேச வைக்கும். அதுதான் எங்கள் குறிக்கோள். அதனால்தான் படத்தை நாங்கள் கான் திரைப்பட விழாவில் துவக்கினோம். ’சங்கமித்ரா’ எந்த ஒரு மேற்கத்திய சாயலும் இல்லாமல் மொத்தமாக இந்தியப் படமாக இருக்கும் என்றாலும், சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்துள்ளோம்

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சாதனைகளையும், வளத்தையும் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வர வேண்டும் என்பதே நோக்கம். இந்தியாவில் படம்பிடிக்கப்பட்ட மேற்கத்திய படங்கள் எல்லாம் சேரிகளையும், ஏழ்மையையும் மட்டுமே பேசின. அது இந்தியாவின் 5 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மறுபக்கத்தை என் படம் கொண்டாடும்.

இதுவரை எனது வெற்றிகள் எல்லாமே இந்தப் படத்துக்கான ஏணிப்படிகள் தான். ‘சங்கமித்ரா’ தான் எனது இயக்குநர் வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி

Share