Categories
இந்தியா காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மத்திய பிரதேசம் ராகுல் காந்தி

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர்  பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார். ஆனால் ராகுலை போலீசார் மாண்ட்சர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க வில்லை .

இதனால் அவர் பைக்கில் எந்த வித பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லாமல் செல்ல முற்பட்டார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெற கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மாண்ட்சர் மாவட்டத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது ராகுல் கூறியதாவது: ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மாண்ட்சர் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் மத்திய பிரதேசம் மாநிலங்கள்

மத்திய பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தில் போலிஸார் சுட்டு 5 பேர் பலி

பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சுர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் சுட்டதில் ஐந்து விவசாயிகள் பலியாகினர், பலர் காயமடைந்தனர். மன்சுர் மாவட்டத்தில் அதிகமாக வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தற்கொலைகள் இங்கு அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடந்ததால் கோபமடைந்த விவசாயிகள், பொலிஸ் நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தியதுடன், பல பாதுகாப்பு படையினரை தாக்கினர். மாநில நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு படையினரை விரைந்து கொண்டுவந்தது. மேலும் சமூக ஊடக வதந்திகளால் வன்முறைக்கு விரோதமாக தலையிடுவதை தடுக்க இணைய சேவைகளை திரும்பப் பெற்றது.

இரண்டு தனித்தனி சம்பவங்களில் ஐந்து பேர் இறந்ததாக உள்துறை அமைச்சர் புபீந்திர சிங் தெரிவித்தார்.

“நமது நாட்டின் விவசாயிகளுடன் இந்த அரசாங்கம் போரிடுகிறது,” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்து, ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

 

Share