Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் தேர்தல் ஆணையம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த பிங்க் நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரும் அவர்களுக்கான எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு செய்யும் அரங்கில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் இரண்டு முகர்வர்கள் அமர்ந்திருப்பர். வாக்களிக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள எண்ணை மட்டும் தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனாவைக் கொண்டே இந்த எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், வேறு பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டில் கையொப்பமோ, வேறு குறியீடோ எழுதப்பட்டால் வாக்கு செல்லாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share
Categories
இந்தியா தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகமானவையா? ஜூன் 3 முதல் கட்சிகள் நிரூபிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை  முன்வைத்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை எதிர்கொள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த செயல்முறை விளக்கம் முடிந்தவுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித குளறுபடியும் செய்ய முடியாது. அவற்றின் இன்டர்னல் சர்க்யூட்டை மாற்றியமைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் வலுவான ஆதாரம் ஏதும் அளிக்கவில்லை. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார்” என அறிவித்தார்.

Share
Categories
இந்தியா தேர்தல் ஆணையம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டின.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜவுக்கே வாக்குகள் விழும் வகையில் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்நிலையில், தற்போது தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி செயல் விளக்கம் மூலம் 2 தினங்களுக்கு முன்பு நிருபித்துக் காண்பித்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் உள்ள நவீன மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அவ்வாறு முறைகேடு செய்ய இயலாது. பாதுகாப்பு நிறைந்தது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கவும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று கூட்டியுள்ளது. இதில், வாக்காளர்களுக்கு பணம் தரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, அவர்களை கைது செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள 7 தேசிய கட்சிகள் மற்றும் 49 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

Share