Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

 

 

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில்,  “பான்” என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, முடிவில்  ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அவ்வுத்தரவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா; இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து பதில் தருமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த அமர்வு, புதனன்று (இன்று) விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்விவகாரத்தில் இதன் முன்பு நடைபெற்ற கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இடைக்கால தடை : சுப்ரீம் கோர்ட்

வருமானவரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆதார் அட்டையைப் பான் கார்டுடன் இணைத்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளவர்களின் விவரங்கள் கிடைக்கும். இதன் மூலம் வருமான வரிச் செலுத்துவதில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்க முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்த கூடாது என கூறியுள்ளது. வருமான வரி சட்டம் 139 ஏ பிரிவை இதன் மூலம் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என கூறியுள்ளது. இந்த விசாரணை முடியும் வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்காலத் தடை விதிப்பதாக கூறியுள்ளது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள் பான் எண்

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது.

வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுக்களில் “ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் “பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, “போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளனர்.

Share
Categories
ஆதார் எண் இந்தியா

ஆதார் அட்டைக்காக கைரேகை பதிவு செய்வதில் எவ்வித உரிமை மீறலும் இல்லை : மத்திய அரசு

ஆதார் அட்டைக்காக கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வது எவ்விதத்திலும் உரிமை மீறல் இல்ல என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். மேலும் மரபணு சோதனை மேற்கொண்டாலும் தவறில்லை என்றும் முகுல் ரோத்தகி கூறியுள்ளார். பிறநாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை மேற்கொள்ளபடுவதாகவும், சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியமானது என்றும் தெரிவித்தார். விமான பயணத்திற்கு கூட சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

 

Share
Categories
ஆதார் எண் இந்தியா

ஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன

(நன்றி: பி.பி.சி. தமிழ்)

சண்டிகர் மாவட்ட நிர்வாக வலைதளத்தில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான தரவு மீறல்கள் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

யூஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் சம்பந்தப்பட்ட நபரின் உணவுப்பொருள் வழங்கல் அட்டை தகவல்களும் வலைதளத்தில் காணப்பட்டது.

பிரத்யேக தகவல்கள் கசிந்தது வெளிச்சத்திற்கு வந்தவுடன், இந்த வலைத்தள பக்கம் நீக்கப்பட்டது.

முன்பு, இது போன்ற தரவுகள் ஜார்கண்ட் மாநில வலைத்தளத்திலும் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்களும், விமர்சங்களும் எழுந்துள்ளன.

வெவ்வேறு அரசு திட்டங்களுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் லட்சிய திட்டத்தை தற்போது இந்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதார் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கூறப்பட்டது.

சர்ச்சையை உருவாக்கிய சண்டிகர் மாவட்ட நிர்வாக வலைதளம்

ஆனால், தற்போதைய நரேந்திர மோதி அரசில், அரசு சேவைகள் முதல் டிஜிட்டல் விண்ணப்பங்கள் வரை பல்வேறு திட்டங்களில் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை அரசு எவ்வாறு கட்டாயமாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வினவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதை தெரிவித்த உச்ச நீதிமன்றம் , ”ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக மாற்று சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக நாங்கள் உத்தரவிட்டுள்ள போது, ஆதார் அடையாள அட்டையை நீங்கள் எவ்வாறு கட்டாயமாக்கலாம்?” என்று இந்திய அரசை வினவியது.

ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள், இந்த அட்டை கட்டாயமாக்கப்படுவது, ஆதார் அடையாள அட்டையில் இருந்த தகவல்களை திருடுவது மற்றும் அது தவறாக பயன்படுத்தபடுவது ஆகிய ஆபத்துக்களை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.

Share