Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும்  திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம்  பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.


அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது.

இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், வட கொரியா உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகம் உள்ளது என்றார்.

வட கொரியாவின் தற்போதைய நிதானம், பல தரப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனாவிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே என்பது தெளிவு. ஐ.நா.வின் தடைத் தீர்மானத்தின் பின்னர், வடகொரியாவில் இருந்து வரும் சில இறக்குமதிப் பொருட்களை சீனா, நிறுத்திக்கொண்டுள்ளது.

இதனைத் தவிர, முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போல கண்டும் காணாமல் இருக்காமல், தற்போதைய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் ஆணவப் பேச்சுகளுக்குத் தக்க பதில்களை அவ்வப்போது கூறிவருவதாலும், வட கொரியாவின் அண்டைய நாடுகள், எங்கே போர் வந்துவிடுமோ, என்ற அச்சத்தினால் எப்போதும் இல்லாத அளவுக்கு வட கொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாலேயே, இந்த தற்காலிக நிதானம் என்று கருதலாம். இருப்பினும், வட கொரியா போன்ற ரகசியமாக செயல்படும், சர்வாதிகார அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்று நாம்  உறுதியாக சொல்ல முடியாது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில்,  “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

 

Share
Categories
அமெரிக்கா ஆசியன் உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள், வட கொரியாவின்  அணுசக்தி திட்டத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது  அதன் அணுசக்தி திறனை வலுப்படுத்த முற்படுவதை தடுக்கவோ செய்யாது என்று அதில் கூறுப்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் ” ஒரு நீதி நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பதன் விபரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆசியன் மாநாட்டில் வட கொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வலியுறுத்தல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள்,  வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென  கூட்டாக அறிவித்தனர்.

அந்த அறிக்கையில், “வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள்

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர். இப்பதவிக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என நாசா விளம்பரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் நான்காவது வகுப்பு படிக்கும் ஜேக் டேவிஸ், மேற்படி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் “ஜேக் டேவிஸ், விண்மீன் மண்டல பாதுகாவலர்” என்று கையொப்பமிட்டிருந்தார். இப்பதவி தனக்கு ஏன் சரியானதாக இருக்கும் எனச் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார். அவற்றுள், விண்வெளி மற்றும் ஏலியன் சம்பந்தமாக பார்க்கமுடிந்த அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்துவிட்டதாகவும், நன்றாக வீடியோ கேம்கள் விளையாடத் தெரியும் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, தான் சிறுவயதினராக இருப்பதால், ஏலியன்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இக்கடிதம் நாசா அலுவலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாசாவின் கோள் ஆராய்ச்சி இயக்குனர் ஜோனத்தன் ரால், ஜேக்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், நாசாவின் கோள்கள் சேவைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் எல். கிரீன் அனுப்பியுள்ள பதில் கடிதமே, ஜேக்கிற்கு அதிக நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜேம்ஸின் கடிதத்தில், “நாங்கள் புத்திசாலித்தனமான அறிவியல் அறிஞர்களிடம் இருந்தும், பொறியியலாளர்களிடம் இருந்தும்  வருங்காலத்தில் எங்களுக்கு உதவிகளை  எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீர் உமது பள்ளி, கல்லூரிப் படிப்பினை சிறப்பாக முடித்து, நாசாவில் எங்களுடன் சேருவீர் என எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.

வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.

 

ஐ.நா.-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இத்தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக ஐ.நா. உறுப்பு நாடுகளை பாராட்டினார். “இதுவரை வட கொரியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடைத் தீர்மானங்களைக் காட்டிலும் இது பெரிதாகும். எனினும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாக நினைப்பதானால், அது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதாகும்.  வடகொரியாவின்  சர்வாதிகார அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, அது மேலும் வேகமாக, அபாயகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது” என்று நிக்கி ஹேலி கூறினார்.

 

மேலும் இத்தீர்மானம் வட கொரிய தொழிலாளர்களுக்கு பிறநாடுகளில் வேலைக்கான அனுமதி வழங்குவதையும் தடை செய்கிறது. வட கொரிய நிறுவனங்களுடன் மற்றநாட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதையும், புதிய முதலீடுகளையும் தடுக்கிறது.

 

வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல. அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.

 

இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன்.

மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, வட கொரிய அரசை கவிழ்க்க நினைக்கவில்லை என்றார்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி தலைப்புச் செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது  ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“ஜெனரல் கெல்லி வெள்ளை மாளிகையில் முழுமையாக செயல்பட  அதிகாரம் கிடைத்துள்ளது , மேலும் அனைத்து ஊழியர்களும் அவரது அதிகாரத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும்”, என்று கூறிய சாரா ஹக்கபீ, மேலும் வேறு ஊழியர்கள் மாற்றப் படும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.

 

 

 

Share
Categories
அமெரிக்கா தலைப்புச் செய்திகள் ஹவாய் ஹாணலுலு

அமெரிக்காவின் ஹாணலுலுவில் சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹாணலுலு நகரில் மொபைல் ஃபோன் குறித்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சாலையில் செல்லும் பாதசாரிகள்  மொபைல் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும். பாதசாரிகள் குறுஞ்செய்தி அல்லது போனில் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் தடுக்கவே இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் நகர நிர்வாக தலைவர் கிர்க் கால்டுவெல் தகவல் தெரிவித்துள்ளார்.

முதலில் அபராதம் செலுத்திவிட்டு பின் தொடர்ந்து அந்த தவறை திரும்ப செய்தால் 99 டாலர்கள் வரை அபராதம் விதிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாலைகளிலும், நடைபாதைகளிலும் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்திக் கொண்டே சென்றதால் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 11,000 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரில் சாலை விபத்துகளை தவிர்க்க இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும்  எழுப்பப் பட்டிருந்தது.

மேலும், அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும்  ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதினிமித்தம், மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்ய வெளியுறவுத் துறை, அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455-ஐ தாண்டக்கூடாது என அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share