இலங்கையில் ஆலய கட்டுமானம் இடிந்து பலர் காயம்

இலங்கையில் ஆலய கட்டுமானம் இடிந்து பலர் காயம்
May 21, 2017

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயமொன்றின் கட்டுமானப் பணிகளின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மற்றும் மட்டக்களப்பு அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான மண்டப கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மண்டபத்திற்கான கூரை கான்கிரீட் இடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கட்டடம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் கட்டட நிர்மாண தொழிலாளர்கள் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் போலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டட இடிபாடுகளுக்கள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இடிபாடுகளை அகற்றி தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.