அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை
May 22, 2017

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டவெண்டும் என  முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.என தகவல் வெளியாகி உள்ளது. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து கையெழுத்திட்டு உள்ளனர்.